ஆச்சி எங்கே செல்லுகிறாள் ?
கவிஞர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
இந்த ஆச்சி
முதுமையிலும் அழகுதானே !
ஏழ்மையிலும் வலிமைதானே !
கருத்த மேனியின் திறந்த
முதுகினில் தோல் சுருக்கங்கள்
வரி வரியாக , அழகு அழகாக !
தலையில் ஒரு சுமை !
இடையில் ஒரு கூடை !
கையில் ஒரு பை !
மெ(ய்)யில் ஒரு சேலை !
இந்த ஆச்சி
எங்கு செல்கிறாள் ? ஏன் செல்கிறாள்?
யாரைப் பார்க்கச் செல்லுகிறாள் ?
பல்லாண்டு உடன் இருந்தார் ,
நல்லதிலும் கெட்டதிலும்
இன்பத்திலும் துன்பத்திலும்
இணைந்து நின்ற கணவர் !
இந்த ஆச்சி
இப்போது தாத்தாவைப் பார்க்கச்
செல்லவில்லை ; ஏனென்று
உடையில் தெரிகிறது. !
சுமைகள் பல இருந்தாலும்
தளர்வில்லா நடையில்
சுகம் தெரிகிறது !
சுமையின் கனம்
தாங்கும்
ஆச்சியின் உடல் !
வேதனையின் கனம்
தாங்குமா?
ஆச்சியின் மனம் ?
சுமைகளில் என்ன இருக்கும்?
சுவை மிகுந்த கை முறுக்கும்
வெல்லம் போட்டுச் செய்த
பருப்பு உருண்டைகளும்,
நிறைந்திருக்கும்தானே !
நெஞ்சின் பாச உணர்வில்
அந்த சுமைகளின் பாரமும்
குறைந்திருக்கும்தானே !
இந்த ஆச்சி
பெற்ற மகளையும்
உற்ற மகனையும்
பார்க்கச் செல்லுகிறாளா ?
மடியில் விளையாடும்
மழலை மொழி பேசும்
பேரனையும்
பேர் சொல்லப் பிறந்திருக்கும்
பேத்தியையும்
பார்க்கச் செல்லுகிறாளா?
இந்த ஆச்சி
எங்கு செல்கிறாள் ? ஏன் செல்கிறாள்?
யாரைப் பார்க்கச் செல்லுகிறாள் ?
Comments
Post a Comment