கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்



        கம்ப இராமாயணம் அழகிய பாடல்கள்

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!                             --- 1 

( கடவுள் வாழ்த்து)

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைதாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு
அஞ்சிலே ஒன்று வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்.

( ஆஞ்சனேயர் பற்றி கம்பனின் அற்புத பாடல்)

 சொல் ஒக்கும் கடிய வேக சுடு சரம், கரிய செம்மல்
அல் ஒக்கும் நிறத்தினாள் மேல் விடுதலும், வயிரக் குன்றக்
கல் ஒக்கும் நெஞ்சில் தாங்காது, அப்புறம் சுழன்று, கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருள் என, போயிற்று அன்றே!              ---  388

( இராமன் – தாடகை வதைப் படலம்)

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி, இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் இன்றி, மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில், மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன், கால் வண்ணம் இங்குக் கண்டேன்!--  475

(இராமன் – அகலிகை சாபம் நீங்குதல்)

எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்!                                           -- 514

(இராமன் சீதை -  மிதிலை காட்சி )
  
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர்தம்  உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்.                                                                   – 516

( இராமன் – சீதை மிதிலை காட்சி)

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்
ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்.
கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப்
பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ?                                                                 -- 517

( இராமன் – சீதை மிதிலை காட்சி)

தடுத்து இமையாமல் இருந்தவர், தாளில்
மடுத்ததும், நாண்  நுதி வைத்ததும், நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்.                                                                            -- 699 

(இராமன் வில்லை ஒடித்தல் காட்சி)

தோள் கண்டார், தோளே கண்டார், தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே  கண்டார்; தடக்கை கண்டாரும் அஃதே
வாள் கொண்ட கண்ணார், யாரே வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கொண்ட சமயத்து  அன்னான் உருவு கண்டாரை ஒத்தார்.  -- 1081

(இராமன் மேனி அழகு  --  மிதிலை நகரப் பெண்கள் )

நதியின் பிழை அன்று; நறும் புனல் இன்மை; அற்றே,
பதியின் பிழை அன்று; பயந்து நமைப் புரந்தாள்.
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டதுஎன்றான்.                          -- 1734     

( இராமன் இலக்குவனிடம் சொல்லுதல்)
  
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அஞ் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.                                                          -- 2762

( சூர்ப்பனகை நடந்து வரும் காட்சி)

ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த
பூளை ஆயின கண்டனை; ‘இன்று போய், போர்க்கு
நாளை வாஎன நல்கினன் – நாகு  இளங் கமுகின்
வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்.                      -- 7271       
( இராமன் இராவணனிடம் கூறுதல்)

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்
நாரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும்,
தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போட்டு, வெறுங்கையே மீண்டு போனான்.       – 7272

( இராவணன் போர்களத்திலிருந்து திரும்பிச் செல்லும் காட்சி)

எட்டுத் திசைகளில் உள்ள யானைகளைப் போரிட்டு வென்றவன். இமய மலைதனை தன் தோள்களில் தூக்கியவன். (சாம வேதத்தை இசை நயத்தோடு நாரதர் பாராட்ட பாடிய இராவணன். பத்துத் தலைகளில் அணிந்திருந்த மணிமுடி, தவ வலிமை கண்டு சிவன் கொடுத்த வாள், (சந்திர ஹாசம்) மார்பு, தோள், நாவண்மை, வாள், மணிமுடி)

மாதிரம் எவையும் நோக்கான், வள நகர் நோக்கான், வந்த
காதலர் தம்மை நோக்கான், கடல் பெருஞ் சேனை நோக்கான்,
தாது அவிழ் கூந்தல் மாதர் தனித் தனி நோக்க, தான் அப்
பூதலம் என்னும் நங்கை தன்னையே நோக்கிப் புக்கான்             --  7274 

(இராவணன் போர்க்களத்திலிருந்து திரும்பும் போது)

வான் நகும்; மன்னும் எல்லாம்  நகும்; - நெடு வயிரத் தோளான்
நான்  நகும் பகைவர் எல்லாம் நகுவர் என்று, அதற்கு நாணான்;
வேல் நகு நெடுங்கண், செவ்வாய், மெல் இயல், மிதிலை வந்த
சானகி நகுவள் என்றே நாணத்தால் சாம்புகின்றான்               --  7282
(இராவணன் போர்க்களத்திலிருந்து திரும்பும் போது)

உறங்குகின்ற கும்பகன்ன! உங்கள் மாய வாழ்வு எலாம்
இறங்குகின்ற தின்றுகாண்; எழுந்திராய்; எழுந்திராய்!
கறங்கு போல விற் பிடித்த கால தூதர் கையிலே
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்.      --  7316

(இராவணனின் தூதர்கள் கும்பகர்ணனிடம் கூறுதல்)

என்னை வென்றுளர் எனில், இலங்கை காவல!
உன்னை வென்று உயர்தல் உண்மை; ஆதலால்
பின்னை நின்று எண்ணுதல் பிழை; அப் பெய்வளை
தன்னை நன்கு அளிப்பது தவத்தின் பாலதே!                     -- 7368

( கும்பகர்ணன் இராவணனிடம் கூறுதல்)

நீர்க் கோல வாழ்வை நச்சி, நெடிது நான் வளர்த்துப் பின்னைப்
போர்க் கோலம் செய்து விட்டாற்கு உயிர் கொடாது, அங்குப் போகேன்;
தார்க் கோல மேனி மைந்த! என் துயர் தவிர்த்தி ஆகின்
கார்க் கோல மேனியானைக் கூடுதி, கடிதின் ஏகி!

( கும்பகர்ணன் விபீஷணனிடம் கூறுதல்)                           -- 7426

அல்லினால் செய்த நிறத்தவன் அனையது பகர
மல்லினால் செய்த புயத்தவன், ‘மாற்றங்கள் நும்பால்
வில்லினால் சொல்லின் அல்லது, வெந்திறல் வெள்கச்
சொல்லினால் சொலக் கற்றிலம் யாம் எனச் சொன்னான்

(இலக்குவன் கும்பகர்ணனிடம் கூறுதல்)                            -- 7507

‘அய்யன் வில் தொழிற்கு ஆயிரம் இராவணர்
         அமைவிலர் அந்தோ! யான்      
கய்யும் காலும் இழந்தனென்; வேறு இனி
         உதவல் ஆம் துணை காணேன்;
மய்யல் நோய்கொடு முடிந்தவன் நாள் என்று,
          வரம்பு இன்றி வாழ்ந்தானுக்கு
உய்யுமாறு அரிது என்று தன் உள்ளத்தின்
           உணர்ந்து ஒரு துயருற்றான்.
(கும்பகர்ணன் போர்க்களத்தில் தனக்குள்)                            -- 7622

‘வரம் கொண்டான்; இனி மறுத்தல் வழக்கு அன்றுஎன்று ஒரு வாளி
உரம் கொண்ட தடஞ் சிலையின் உயர் நெடு நாண் உள் கொளுவா,
சிரம் கொண்டான்; கொண்டதனைத் திண் காற்றின் கடும் படையால்,
அரம் கொண்ட கருங் கடலின் அழுவத்துள் அழுத்தினான்

( கும்பகர்ணன் வேண்டு கோளுக்கிணங்க இராமன் செயல்)       -- 7629

போர் மகளை, கலை மகளை, புகழ் மகளை,
            தழுவிய கை பொறாமை கூர
சீர் மகளை, திரு மகளை, தேவர்க்கும்
            தெரிவு அரிய தெய்வக் கற்பின்
பேர் மகளை, தழுவுவான் உயிர் கொடுத்துப்
             பழி கொண்ட பித்தா! பின்னைப்
பார் மகளைத் தழுவினையோ, திசை யானைப்
              பணை இறுத்த பணைத்த மார்பால்?

(போர்க் களத்தில் இராவணன் இறந்ததும் வீடணன் புலம்பல்)      –9927

வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த
              திரு மேனி மேலும் கீழும்
எள் இருக்கும் இடன் இன்றி, உயிர் இருக்கும்
               இடன் நாடி, இழைத்தவாறோ?
கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
               மனச் சிறையில் கரந்த காதல்
உள் இருக்கும் எனக் கருதி, உடல் புகுந்து
                தடவியதோ ஒருவன் வாளி?

(போர்க் களத்தில் இராவணன் இறந்து கிடக்கும் காட்சி)           --  9940 





Comments

Popular posts from this blog

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE