என்னுடைய நீண்ட நாள் இனிய நண்பர் தன் வீட்டுத் தோட்டத்தில் ஆயிரம் இதழ்கள் கொண்ட அல்லி மலர்கள் பூத்திருக்கின்றன என்று புகைப் படங்கள் அனுப்பி, அல்லி மலர்கள் பற்றிக் கவிதை எழுதச் சொன்னார். மனதில் இரண்டு காட்சிகள் ஓடின.

காட்சி ஒன்று: அழகிய பெண் ஒருத்தி செடிகளின் அருகே சென்று அல்லி மலரைக் கையில் எடுக்கிறாள்.

காட்சி இரண்டு :  ஆழகிய தடாகம், அல்லி மலர்கள் பூத்திருக்கின்றன. கன்னி ஒருத்தித் தன் காதலன் வரவை எதிர் பார்க்கிறாள்;

இப்போது கவிதைகளைப் பாருங்கள்./ கேளுங்கள்:

 

 

                                அல்லி  மலரும்  அற்புதப்  பெண்ணும்

    

     (BEAUTY WITH FLOWER  )— கவிஞர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

 

காட்சி - 1

 

ஆயிரம் இதழ்கள் கொண்ட

இந்த அல்லி மலர்கள்

ஆயிரத்தில் ஒருவருக்கும்

கிடைப்பதில்லை!.

தோட்டத்தின் செடிகளில் பூத்திருக்கும்

அடுக்கடுக்காய் இதழ்கள் அமைந்திருக்கும்

 

அத்தனையும் சிவந்த இதழ்கள்!

முகர்ந்திடவும்,   

மலரின் இதழ்களில்

முத்தமிடவும்  சிறந்த  இதழ்கள்.!

 

அல்லி மலர் அழகா,

அருகிலிருக்கும்

அற்புத அழகி அழகா,

அல்லி மலரும் அழகு!

அல்லி மலர் ஏந்தும்

அற்புத  அழகியும் அழகு!

 

அவள்

பெண்ணில் பேரழகி!

சொல்லில்  தேனழகி!

அல்லி மலரைத் தன்னிரு

கரங்களில் தொடுகிறாள்.

நெஞ்சோடு அணைக்கிறாள்

இதழ் கொண்டு மலரின் இதழில்

இதழ் பதிக்கின்றாள்!

 

அந்த அழகிக்கு

வயதுகள் சில நடந்தாலும்

ஆண்டுகள் பல கடந்தாலும்

வற்றாத வாலிபம், என்றும்

குறையாத அழகு!

                                                  

தேனருந்த வந்த வண்டு

அழகியின் முகமே அல்லி !

ஆழகியின்  இதழ்களே

மலர்களின் சிவந்த இதழ்கள்  

என மயங்கி இதழ் திறந்து

தேனருந்த முயல்கின்ற காட்சி!..

 

காட்சி - 2

 

அழகிய தோட்டம் அதன் நடுவினிலே

சின்னஞ் சிறிய தடாகம் !

கன்னியொருத்திக் காத்திருக்கிறாள்

காதல் சொல்லும் காதலனைத் தேடி!

காதலனோ வரவில்லை, காலம் செல்கிறது

தடாகத்தில் தன் முகம்   பார்க்கிறாள்.

 

காத்திருக்கும்

கன்னியின் வதனம்  தடாகத்  தண்ணீரில் !

பூத்திருக்கும்

தாமரை  மலரும்  தடாகத் தண்ணீரில் !

 

பாடி வரும்  வண்டினம் மலர் எது

மங்கையின் முகம் எது என்று மயங்கி

கன்னியின் சிவந்த  இதழ்களே

அல்லியின் சிவந்த  இதழ்கள் என்றெண்ணி

தேனருந்த முயல்கின்ற காட்சி!..

 

அல்லி மலரும் இதழும்

இன்று வாடிவிடும்

அழகியின் முகமும் இதழும்

என்றும் வாடுவதில்லை!

 

 

 

Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE