யார் அந்த நாற்பது பேர் ?


                 யார் அந்த நாற்பது பேர் ?

கருவில்  சுமந்து,  பின் மடியில் 
சுமந்த என் அன்னை !
உருவில் வளர்ந்து, பின் தோளில்
சுமந்த என் தந்தை !
என் மீது பாசம் கொண்டவர்கள்;
அளவிலா நேசம் கொண்டவர்கள் !
இவர்கள் இருவரையும்
நினைவில் மறந்து விட்டு, நெஞ்சில் துறந்து விட்டு
நாடு காக்க எல்லை சென்றேன்.
என்னுயிர் தந்தேன்; இந்த மண்ணுயிர் காத்தேன்.

பெண்ணுக்குரியப் பேரேழிலாள், இந்த
மண்ணுக்குரியப் பண்புடையாள்; அவள் என்
கண்ணுக்கினிய  காதல்  மனையாள் !
கட்டித் தங்கமென, சுட்டும் சுடர் விழியுடன்
தொட்டிலில் உறங்கும் எங்கள் குழந்தை !
இவர்கள் இருவரையும்
நினைவில் மறந்து விட்டு, நெஞ்சில் துறந்து விட்டு
நாடு காக்க எல்லை சென்றேன்.
என்னுயிர் தந்தேன்; இந்த மண்ணுயிர் காத்தேன்.

உற்றவர்கள், உறவினர்கள், உயிர் நண்பர்கள்
பெற்ற மண், அந்த மண் பெற்ற மரங்கள்,
செடி கொடிகள், இலைகள், மலர்கள்
நீந்தி விளையாடிய ஆற்று நீர், குளத்து நீர்
கிணற்று நீர், வாய்க்கால், வரப்பு,
தென்னஞ்சோலை, மாஞ்சோலை,
அங்கு குயில்களின் இனிய  பாட்டு,
அழகு மயில்களின் எழில் நடனம்,
இவற்றையெல்லாம்
நினைவில் மறந்து விட்டு, நெஞ்சில் துறந்து விட்டு
நாடு காக்க எல்லை சென்றேன்.
என்னுயிர் தந்தேன்; இந்த மண்ணுயிர் காத்தேன்.
எங்கள் ஊர், எங்கள் தெரு, எங்கள் வீடு,
வீட்டின் திண்ணை, முற்றம், முன் வாசல்,
பின் வாசல், தோட்டம், கிணற்றடி, அடுப்படி,
அங்கு கேட்கும் பாத்திரங்களின் சத்தம்,
மங்கையர் கைகளில் குலுங்கும்
வளையல்களின் இனிய சத்தம்
அன்னமென  நடமாடும் எங்கள் குல 
மங்கையரின், மழலைகளின் கொலுசு சத்தம்,
உலை கொதிக்கும் சத்தம்; மொத்தத்தில் அந்த
சத்தம் தரும் சந்தத்தில் சமையல் தரும் 
நறுமணம், ஈடில்லாதது; இணையில்லாதது.
இவற்றையெல்லாம்
நினைவில் மறந்து விட்டு, நெஞ்சில் துறந்து விட்டு
நாடு காக்க எல்லை சென்றேன்.
என்னுயிர் தந்தேன்; இந்த மண்ணுயிர் காத்தேன்.

உறவுடன் விருந்தமர்ந்து, ஊர்க் கதையெல்லாம்
கூடிப் பேசி, வாய் விட்டு சிரித்து, மனதோடு பழகி,
காலம் செல்வதும், நேரம்  போவதும் தெரியாமல்
சென்ற நாட்கள் எத்தனை ? சொல்லுங்களேன் !
எங்கள் மனதெல்லாம் மகிழ்ச்சி; பின் நெகிழ்ச்சி !
அக நகும் நண்பர்கள்; அவரிடம் அன்புடன் பேசி,
ஒரு நாள் சண்டையிட்டுப் பழகி,
மறு நாள் மனம் மாறி அவர் நட்பை
நாடுவதும், ஓடுவதும், தேடுவதும்
நண்பர்களுக்கு இயல்பல்லவா ?
இவர்களையெல்லாம்
நினைவில் மறந்து விட்டு, நெஞ்சில் துறந்து விட்டு
நாடு காக்க எல்லை சென்றேன்.
என்னுயிர் தந்தேன்; இந்த மண்ணுயிர் காத்தேன்.

பள்ளி செல்லும் என் பிள்ளைகள், அவரிடம்
துள்ளி வருவது எத்தனை கதைகள் !
பாசமுடன்  கதைகள் சொல்வதும், கேட்பதும்
எத்தனை இன்பம் இறைவா ? இறைவா ?
இவர்களையெல்லாம்
நினைவில் மறந்து விட்டு, நெஞ்சில் துறந்து விட்டு
நாடு காக்க எல்லை சென்றேன்.
என்னுயிர் தந்தேன்; இந்த மண்ணுயிர் காத்தேன்.

பனியும் பெரிதல்ல; உயிரைக் கொல்லும்
அந்தக் குளிரும் பெரிதல்ல
இனிய நம் நாட்டின் எல்லையில்லா
எல்லை, என்றும் அது நம் உடமை;
அந்த எல்லையைக் காப்பது நம் கடமை
நான்கு திசைகளும் பார்த்து நின்றேன்;
நமது தாய் நாட்டைக் காத்து நின்றேன்.

பகைவர்களிடம்
நட்புணர்வு கொண்டு, நல்ல மனம் கொண்டு
நாம் இரு கரங்கள் நீட்டினோம்.
பகையுணர்வு கொண்டு, பகுத்தறிவின்றி
வெட்டினார் அவர் நம்  கரங்களை !
நெஞ்சில் பகையின்றி, ஓரு வஞ்சமின்றி
உடல் தழுவி, மனம் மகிழ அருகில் சென்றோம்.
நெஞ்சில் வஞ்சம் மிகக் கொண்டார் - அவர்
தழுவிய நெஞ்சை எரித்து விட்டார்.

பழிக்குப் பழியா ? அதுதான் இதற்கு
சிறந்ததொரு  நல்ல வழியா ?
இல்லை, வேறில்லை இனி ஒரு வழியா ?
‘ யாதும் ஊரே, யாவரும் கேளிர் ‘ என்று
சொல்ல அங்கு யாருமில்லையா?
இந்த ஒரு மந்திரத்தை உரக்க நாம் சொல்லுவோம்;
இங்கு பகை மறைய, இந்த உலகமறிய 
இன்றும் என்றும் மீண்டும், மீண்டும் சொல்லுவோம் !

பகை வெல்வோம் பாரெல்லாம் புகழ !
புத்தர், காந்தி, யேசு சொன்ன அந்த
அன்பு மொழியால். பண்பு வழியால் !.
இத்தனைக்கும் பிறகு அன்பு, அமைதி என்ற
வழிக்கு அவரினி வரவில்லையென்றால்,
எட்டுத் திசைகளும் முழங்க,
இந்த மண் அதிர, அந்த விண் எதிர
சுட்டுத் தள்ளிடுவோம் பகைவர்களை
ஆயுதங்கள் பல கொண்டு !
வாழ்வில் மறக்க முடியாத
நல்ல ஒரு பாடம் கொண்டு !

மண்ணை விட்டு மறைந்த மாவீரர்கள்  நம்
கண்ணை விட்டு மறையாத  மகா புனிதர்கள் !
மனதை   விட்டு  அகலாத  மா மனிதர்கள் !
விண்ணில் அவர் ஆத்மா சாந்தி கொள்ளட்டும்
மண்ணில்  அவர் பெற்றோர், மனைவி, மக்கள்
அனைவரது துன்பம் தீரட்டும்;அவர்கள்
மனம் நல்ல அமைதி கொள்ளட்டும் !

அவர்களுக்கு இனி
குறையென்றும் இல்லாமல் இந்தியா  பார்க்கட்டும் !
குறையென்றும் இல்லாமல் இறைவன் காக்கட்டும் !
இன்று முதல் நல்லன வாழட்டும்; தீயன அழியட்டும் !
இறைவன் நல்லறிவு பகைவர்க்கு  அருளட்டும்:
இந்தியா பகையின்றி என்றும் இனி வாழட்டும் !

வாழ்க இந்தியா !  வளர்க இந்தியா !

வணக்கம்.
                             -- கவிஞர் கே.எஸ்,கோபால கிருஷ்ணன்  









Comments

Popular posts from this blog

கம்ப இராமாயணம் – அழகிய பாடல்கள்

வெனிஸ் நகர வர்த்தகன் THE MERCHANT OF VENICE -WILLIAM SHAKESPEARE