ஜானு என்ற ஜானகி
------கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
“சீதா, நம்ம பொண்ணு ஜானு வருகிற
விமானம் எத்தனை மணிக்கு ஏர்போர்ட்டில் வந்து இறங்குகிறது”? என்று சுந்தரேசன் கேட்கிறார்.
‘ஏங்க, ஜானு சரியாக காலை 11 மணிக்கு வருகிறாள். நேற்று நீங்கதானே சொன்னீங்க,
அதற்குள்ளே மறந்தாச்சா?” சரி நாம எப்ப புறப்படனும்? என்று சீதா கேட்கிறாள். மேலும்
“இங்கிலாந்துலே ஐந்து வருடங்கள் டாக்டர் படிப்பை முடிச்சுட்டு ஜானு வரா, சரியாக 10
மணிக்கு நாம இரண்டு பேரும் ஏர்போர்ட்டிலே இருக்கனும். நம்ம ஜானுவைப் பார்த்து ரொம்ப
நாளாகி விட்டதல்லவா?’என்கிறாள்
சுந்தரேசன் சீதா தம்பதியருக்கு ஒரு மகன் உண்டு. பெயர் கணேசன். கல்லூரியில்
படிக்கும் போது ஒரு பெண்ணைக் காதலித்து பெற்றோர்கள் விருப்பமில்லாமல் சில ஆண்டுகளுக்கு
முன்பு திருமணம் செய்து கொண்டு தலைநகர் டெல்லியிலேயே செட்டிலாகி விட்டான். போக்கு வரத்தோ,
பேச்சு வார்த்தையோ இல்லை. சீதா மகனிடம் அனுசரித்துப் போக விரும்பினாலும் சுந்தரேசன்
தன்னுடைய மகன் முகத்தில் விழிப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார். எனவே சுந்தரேசன்,
சீதா இருவரும் எப்போதுமே மகள் ஜானுவைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.
ஜானுவை மேல் நாட்டிற்கு அனுப்பி ஒரு சிறந்த டாக்டராக்கி விட வேண்டும்
என்பது சீதாவினுடைய நீண்ட நாள் கனவு என்று பக்கத்து வீடுகளில் அடிக்கடி சொல்லுவாள்.
ஜானுவும் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி என்றும், முதல் ரேங்க் வாங்குவாள் என்றெல்லாம் எல்லோரிடமும்
இவர்கள் சொல்லிப் பெருமைப்படுவதுண்டு. மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ கடைகளுக்குச்
சென்று ஜானுவுக்குப் பிடித்த சுடிதார், மற்றும் புதுமையான டாப்ஸ், ஜீன்ஸ் போன்றவை வாங்கி
வந்து விடுவார்கள். பட்டுச் சேலை தவிர வேறு சேலைகள் வாங்குவதில்லை. ஒரு பெண்ணுக்கு
வேண்டிய நகைகளுக்கு மேலேயே ஜானுவுக்காக வாங்கி வைத்திருக் கிறார்கள்.
சின்ன வயதில் ஜானு என்ன கேட்டாலும் அல்லது கேட்காமலும் கூட இவர்களே
எதையாவது பார்த்து உடனே வாங்கி விடுவார்கள். எத்தனைப் பட்டுப் பாவாடைகள், தாவணிகள்,
வளையல்கள், ஜானுவின் துணிமணிகள் இரண்டு பீரோ முழுவதும் நிறைந்திருக்கும். விளையாட்டுப்
பொருள்களுக் கென்றே தனியாக ஒரு பீரோ. பாங்க் லாக்கரில் ஜானு நகைகள் மட்டுமே. திருமண
சமயத்தில் சீதா கொண்டு வந்த நகைகள் அனைத்துமே ஜானுவுக்குத்தான் என்று எல்லோரிடமும்
சொல்லிக் கொண்டிருப்பாள். இவற்றையெல்லாம் ஜானுவைத் தவிர வேறு யாரும் தொடக் கூடாது என்று
இருவரும் எல்லோரிடமும் கறாராக சொல்லி வைத்திருக்கிறார்கள்.
யாராவது ஜானுவைப் பற்றிக் குறை சொன்னால், அன்றிலிருந்து அவர்கள் சுந்தரேசன்,
சீதா இருவர்க்குமே எதிரிகளாகி விடுவார்கள். ஜானு கண் கலங்குவதை ஒரு நாளும் பொறுத்துக்
கொள்ள மாட்டார்கள். ஜானுவுக்குப் பிடித்த உணவு வகைகளைத்தான் வீட்டில் தயாரிப்பார்கள்.
கடந்த சில ஆண்டுகளாக சீதாவுக்கு உடல் நிலை பலகீனமாக இருந்ததால் சமையல் செய்வதற்கு ஒரு
மாமி வருவதுண்டு. அவளிடமும் ஜானுவுக்குப் பிடித்த உணவுகளை ஜானுவிடம் கேட்டுக் கேட்டு
செய்ய வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தார்கள். மாமி செய்த உணவு மற்றும் டிபன் வகைகள்
ஜானுவுக்கு பிடிக்கவில்லையென்றால் உடனே வேலையை விட்டு அனுப்பி விடுவதாக மாமியிடம் அடிக்கடி
சொல்லுவார்கள். மாமியும் சிறிதும் கோபப்படாமல் சிரித்த முகத்துடன் இவர்கள் சொல்லுவதைக்
கேட்டுக் கொள்வாள்.
ஒரு நாள் சுந்தரேசன், “ சீதா, ஜானு, ஜானு என்று எப்போதுமே நம்ம மகளைப்
பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமே, அவளுக்குக் கல்யாணமாகி புருஷன் விட்டிற்குச் சென்று
விட்டால் நாம இரண்டு பேரும் என்ன செய்யப் போறோம்? “ என்று கேட்டார்.
சீதா, “அதெல்லாம் ஒன்னும் கவலைப்பட வேண்டாம். ஜானுவுக்குப் பொருத்தமான
லட்சனமான ஒரு பையனைப் பார்த்து கல்யாணம் செய்யலாம். மாப்பிள்ளை வீட்டாரிடம் நம்ம வீட்டிலேயே
பெண்ணும் மாப்பிள்ளையும் இருக்க வேண்டும் என்று கண்டிஷனாக சொல்லிடனுங்க. நம்ம ஜானு நம்மை விட்டும் இந்த வீட்டை
விட்டும் போகக் கூடாதுங்க. என்ன நான் சொல்லுவது சரிதானே “ என்றாள்.
சுந்தரேசன் பதில் ஒன்றும் சொல்லாமல் மெதுவாக சிரித்துக் கொண்டார். ஜானுவை
ஐந்து வயதில் அருகிலுள்ள ஒரு பள்ளியில் கொண்டு சேர்த்ததையும், முதல் நாள் ஜானு அழுது
கலாட்டா பண்ணியதைப் பார்த்துத் தான் அழுததையும் மற்றவர்களிடம் சீதா சொல்லுவாள். ஒரு மாதமாக தினம் ஜானுவின் பள்ளி முடியும் வரை வாசலில்
இருந்த ஒரு மரத்தடியில் தான் காத்துக் கொண்டிருப்பதும் ஜானுவுக்கு மதிய உணவு அங்கேயே
கொடுப்பதும் வழக்கம் என்று பக்கத்து வீட்டில் வசிப்போரிடம் சீதா அடிக்கடி சொல்லுவதுண்டு.
அருமை மகள் ஜானுவைத் தெருவில் நடக்க விடாமல் தன் இடுப்பில் தூக்கி வைத்துத்தான் ஒரு
வருடம் முழுவதும் பள்ளிக்கு கொண்டு செல்வதும் திரும்ப வருவதுமாக இருந்தேன் என்று சீதா
எல்லோரிடமும் பெருமையாகச் சொல்லுவாள்.
‘நம்ம பொண்ணு ஜானு பள்ளிக்குப் போயிட்டு வந்தா போதும்; அவ நல்ல மார்க் எடுக்கல்லையேன்னுலாம்
நீங்க அவளைக் கோபித்துக் கொள்ளக் கூடாது. நீங்க கோபப்பட்டு நம்ம ஜானு கண் கலங்கி நிற்கும்படி
செய்திடாதீங்க. முதல் ரேங்க், இரண்டாவது ரேங்க் எல்லாம் மற்ற பிள்ளைகள் எடுத்திட்டுப்
போகட்டும். அந்தப் பிள்ளைகளை அவங்க வீட்டில் அடிப்பாங்க, திட்டுவாங்க, ஏன் பள்ளியிலும்
கூட கடுமையாக நடத்துவாங்க. நாம இரண்டு பேரும் ஒரு நாள் ஜானு படிக்கும் பள்ளிக்குச்
சென்று ஜானுவை ஒன்னும் சொல்லக் கூடாது, அவள் படிக்க முடியற அளவுக்குப் படிக்கட்டும் என்று ஜானுவுடைய டீச்சரிடம்
சொல்லிவிடுவோம், சரியா? என்று சீதா கேட்டாள்.
தன்னுடைய மனைவி சீதாவுக்குத்தான் மகள் ஜானு மேலே எவ்வளவு பாசம் என்று
சுந்தரேசன் வியந்து போனார். சீதாவுக்காக ஜானுவின் மேல் தான் வைத்திருக்கும் அன்பையும்
நினைத்துப் பார்த்தார். ஒரு நாள் மழை மிகவும் அதிகமாகப் பெய்தது. ஜானு குடை எடுக்க
மறந்து பள்ளி சென்று விட்டதாகவும், குடையுடன் சுந்தரேசனைப் போகச் சொல்லியிருப்பதாகப்
பக்கத்து வீட்டு கமலாவிடம் சீதா சொன்னாள். சுந்தரேசனும் ஜானுவும் இன்னும் வரவில்லையே
என்று கவலை தோய்ந்த முகத்துடன் வாசலிலேயே சீதா நின்று கொண்டிருந்தாள். வாசலில் அடித்த
மழைத் தூரலில் சீதா பாதி நனைந்திருந்தாள். சீதாவைப் பார்க்க கமலாவுக்கு மிகவும் பரிதாபமாக
இருந்ததால், “ சீதா, நீ உள்ளே போய் உன் புடவையெல்லாம் மாற்றிக் கொள், தலையைக் கூடத்
துவட்டிக் கொள். அவர்கள் இருவரும் சற்று மழை நின்ற பின் வந்து விடுவார்கள்”. என்று சொன்னாள். ஆனால் சீதா காது குடுத்துக்
கேட்பதாக இல்லை. என்னுடைய ஜானு மழையில் நனையாமல் வரனுமே என்று கடவுளைப் பிரார்த்திக்
கொண்டிருந்தாள்.
“ ஏங்க, ஜானுவுக்கு கோ எஜுகேஷன் காலேஜ் வேண்டாங்க, பெண்கள் மட்டுமே
படிக்கும் காலேஜில் சிபார்சு பண்ணியோ அல்லது டொனேஷன் கொடுத்தாவது அட்மிஷன் வாங்கிருங்க.
இந்தக் காலத்திலே ஆம்பளைப் பசங்க ரொம்ப மோசம். ஜானு நாம கண்ணுக்குள் வச்சு வளர்த்த
பொண்ணுங்க . ஜானு நல்ல படிப்பாளே தவிர எப்போதும் பயந்த சுபாவம் உள்ளவ,. பிறரிடம் அதிகம்
பேசக் கூச்சப்படுவாள். நான் சொல்லுவது சரிதானே? என்று சீதா கேட்டாள்.
“சீதா, நீ சொல்லுவது ரொம்ப சரி. நாம நம்ம பெண் ஜானுவை அதிகம் செல்லம்
கொடுத்து வளர்த்ததால் இயற்கையாகவே அவள் சுபாவம் அப்படி அமைந்து விட்டது. நான் நம்ம
வீட்டிலிருந்து 5 கி.மீட்டர் தூரத்தில் உள்ள காலேஜில் அட்மிஷன் வாங்கி விடுகிறேன்
‘ என்றார் சுந்தரேசன்.
“எங்க பொண்ணு டாக்டர் படிப்புக்கு வெளி நாடு செல்லப் போகிறாள். டாக்டராகி வந்து நம்ம ஊரில்
ஒரு மருத்துவ மனை கட்டி எல்லோருக்கும், குறிப்பாக ஆதரவற்ற ஏழைகளுக்கு இலவசமாக ஜானு
சிகிட்சை செய்ய வேண்டும் என்று ஜானு அப்பாவிடம் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.” என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சீதா அடிக்கடி
சொல்லுவதுண்டு.
இப்போது வெளி நாடு படிப்பு முடிந்து ஜானு வருகிறாள் என்று எல்லோரிடமும்
சீதா சொல்லிவிட்டாள். ஜானுவுக்குப் பிடித்தமான அதிரசம், கை முறுக்கு, சீடை, முந்திரிக்
கொத்து எல்லாம் அருகிலுள்ள சில பெண்கள் உதவியுடன்
சீதா செய்து முடித்திருந்தாள். இந்தப் பலகாரங்களின் வாசனை பக்கத்து வீடுகள் வரை கம
கமத்தது.
ஜானு வருகிறாள் வருகிறாள் என்று சொல்லும் சீதாவின் மகிழ்ச்சிக்காக,
விருப்பத்திற்காக சுந்தரேசனும், சீதாவும் தினந்தோறும்
நகைக் கடை, துணிக் கடைகளுக்குச் சென்று புதுவிதமான நகைகள், வளையல்கள், நெக்லஸ், செயின்கள்,
மோதிரங்கள் என்று வாங்கினார்கள். சேலைகள், வித விதமான மாடர்ன் டிரஸ்ஸுகள் எல்லாம் வாங்கிக்
குவித்தார்கள். ஜானு வந்ததும் கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்து,
சில திருமணத் தகவல் இடங்கள் சென்று முக்கியமான கண்டிஷன் ஒன்றை மறக்காமல் எழுதினார்கள்.
அதாவது, வருகிற மாப்பிள்ளை ஜானுவோடு பெண் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
ஜானுவுக்குப் பொருத்தமாகவும், ஜானு மனம் வருந்தாதபடி, ஜானு கண் கலங்காதபடி
வரப் போற மாப்பிள்ளை ஜானுவைப் பார்த்துக் கொள்ள வேண்டும் போன்ற வேண்டுதல்கள் நிறவேற
வீட்டிற்கு அருகில் இருக்கும் பொன்னியம்மன்
கோயில் சன்னிதியில் சுந்தரேசனும், சீதாவும் தினம் நெய் விளக்கு ஏற்றி வந்தார்கள். ஜானு
என்ற பெண் மீது இந்தத் தம்பதிகள் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி நண்பர்கள் உறவினர்கள்
எல்லோரும் வியந்தார்கள்.
“ மாப்பிள்ளை வீட்டார் நாளை மாலை 5 மணிக்கு ஜானுவைப் பெண் பார்க்க வருவதாகப்
போன் பண்ணினார்கள். நீங்க நண்பர்களைப் பார்க்கப் போறேன், லைப்ரரி போறேன் என்று சொல்லிட்டு
எங்கயும் போயிடாதீங்க. அவர்கள் போனில் பேசும் போது நல்ல ஆட்களாக இருப்பதாகத் தெரிகிறது.
ஜானுவுக்குப் பிடித்திருந்தால் கூடிய சீக்கிரமே நல்ல முகூர்த்த நாளாகப் பார்த்து கல்யாணம்
பண்ணிவிட வேண்டியது; என்ன நான் பேசிண்டே போறேன், திக் பிரமை பிடிச்சாப் போல நிக்கிறேள்.” என்று சொல்லும் சீதாவைப் பார்த்து சுந்தரேசன் சிறிது
கவலையுடன் புன்னகை செய்தார்.
மாலை 4 மணியிலிருந்தே ஜானு கட்ட வேண்டிய புதிய பட்டுப் புடவை, மற்றும்
தங்க நகைகள் எல்லாம் சீதா வெளியே எடுத்து வைத்து விட்டாள். மாப்பிள்ளை வீட்டாருக்கு
உபசாரம் பண்ண பஜ்ஜி, சொஜ்ஜி காபி எல்லாம் பக்கத்து வீட்டு கமலா மாமி செய்து கொடுத்தாள்.
சரியாக 5 மணிக்கு மாப்பிள்ளை, அவரது பெற்றோர்கள் மற்றும் சில உறவினர்கள் காரில் வந்து
இறங்கினார்கள். அவர்கள் எல்லோரையும் சுந்தரேசனும் சீதாவும் கை கூப்பி வரவேற்றார்கள்.
எல்லோரும் டிபன் காபி அருந்தி முடித்ததும், மாப்பிள்ளையுடைய அம்மா, ‘பெண்ணை வரச் சொல்லுங்கள்.
மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் அவர்களுக்குள் பிடித்து விட்டால் நாம் கல்யாணத்திற்கு
நாள் குறித்து விடலாம்.” என்றாள்.
இந்த சமயத்தில், கமலா மாமி மாப்பிள்ளையுடைய அப்பா, அம்மா இருவரையும்
சற்றுத் தூரமாக தனியே அழைத்துச் சென்று கண்கள் கலங்க, “ முதலில் நீங்க இருவரும் எங்கள்
எல்லோரையும் மன்னிக்க வேண்டும். என்னுடைய சிநேகிதி சீதா மிகவும் நல்ல குணமுள்ள பெண்.
அவள் கணவர் சுந்தரேசனும் நல்ல மனிதர். ஒருவர் மேல் ஒருவர் அளவிட முடியாத அன்பு வைத்திருக்கிறார்கள்.
இப்படியொரு மனமொத்த தம்பதியினரை எங்கும் பார்க்க முடியாது. இவர்களுக்கு ஒரே மகன்; பெற்றோர்கள்
விருப்பதிற்கு எதிராக, கூட வேலை பார்த்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு டில்லியில்
வேலையில் இருக்கிறான். இங்கு வருவது கூட கிடையாது. மகன் பிரிந்து சென்ற சோகம், தனக்கு
ஒரு பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம்; இரண்டும் சேர்ந்து சீதாவை ஒரு மன நல நோயாளியாக்கி
விட்டது. மீண்டும் சொல்லுகிறேன். எங்கள் அனைவரையும் மன்னித்து விடுங்கள்.’என்றாள்.
மாப்பிள்ளையோட அப்பா, அம்மா இருவரும் “ நீங்கள் சொல்லுவது ரொம்ப விசித்திரமாக
இருக்கிறது. நம்பவும் முடியவில்லை; நம்பாமலிருக்கவும் முடியவில்லை. அதெல்லாம் இருக்கட்டும்.
அந்தப் பெண் ஜானு எங்கே ? இவ்வளவு நேரமாகியும் வெளியே வரவேயில்லை. நாங்கள் ஜானுவைப்
பெண் பார்க்கத்தானே வந்திருக்கிறோம். பெண்ணைப் பார்த்து விட்டுப் போகிறோம். சீதாவுடைய
மன நிலை பற்றியெல்லாம் பின்னால் முடிவு செய்யலாம் “ என்றார்கள்.
இப்போது கமலா மாமிக்கு கண்களில் நீர் வழிவதையும் அழுகையையும் அடக்க
முடியவில்லை. மாப்பிள்ளையின் பெற்றோரைப் பார்த்து , “ மறுபடியும் என்னை மன்னித்து விடுங்கள்.
ஜானு என்று ஒரு பெண்ணே இங்கு கிடையாது. சீதா தன்னுடைய மனதில் ஜானு என்ற பெண்ணை உருவாக்கி,
அந்தப் பெண்ணுக்கு உயிர் கொடுத்து, இந்த இரண்டு வருட காலமாக ஜானு என்ற அந்தக் கற்பனைப்
பெண்ணைப் பாசத்துடன் மிகுந்த அன்புடன், அக்கறையுடன் வளர்த்து வந்திருக்கிறாள். இதெல்லாம்
சுந்தரேசனுக்கும் தெரியும். ஆனால் இதெல்லாம் கற்பனை, நீ கற்பனை உலகத்தில் ஜானு என்ற
பெண்ணை உருவாக்கி ஜானுவுடன் வாழ்ந்து வருகிறாய் என்று சொல்வதற்கு அவருக்கோ, எங்களில்
யாருக்கோ துணிவில்லை. ஜானுவைப் பள்ளியில் சேர்த்ததிலிருந்து இப்போது கல்யாணம் வரை சீதா
கற்பனை செய்து அவ்வப்போது சுந்தரேசனிடமும் என்னைப் போன்றவர்களிடமும் சொல்லி வந்திருக்கிறாள்.
நாங்கள் எல்லோரும் முதலில் ஏதோ விளையாட்டாக சீதா சொல்லுகிறாள் என்று நினைத்தோம். சில
நாட்களுக்குப் பிறகுதான் சீதா உண்மையிலேயே ஜானுவை மனதிற்குள் கற்பனையாக உருவாக்கியிருக்கிறாள்
என்பது எங்களுக்குப் புரிந்தது.
ஒருவேளை உண்மையை நாங்களெல்லாம் சொன்னால், அதை சீதா எப்படி எடுத்துக்
கொள்வாள், உண்மையைப் புரிந்து கொண்டு சகஜமாக இருப்பாளா அல்லது அதை ஏமாற்றமாகக் கருதி
அவளுடைய மன நிலை இன்னும் மோசமாகப் போகுமா என்று தெரியவில்லை. மன நல மருத்துவருக்கும்
எதையும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. சீதாவுடைய போக்கிலே போகட்டும் என்று அவரும்
சொல்லிவிட்டார். ஆனால் ஜானுவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் அளவுக்கு நிலமை போகும் என்று
யாரும் எதிர்பார்க்க வில்லை. இனிமேலும் சீதாவிடம் உண்மைகளை மறைக்க முடியாது என்று தோன்றுகிறது.
ஆனாலும் எப்போது, எப்படி அவளிடம் சொல்லிப் புரிய வைக்கலாம் என்று தெரியவில்லை. அவர்கள்
மகன் கணேசனிடம் இரண்டு வருடங்களாக இங்கு நடந்தவற்றையெல்லாம் சொல்லி விட்டோம். நாளைக்
காலை விமானத்தில் டில்லியிலிருந்து குடும்பத்தோடு வருகிறான். என்ன செய்யப் போகிறோம்
என்ன முடிவு செய்யப் போகிறோம் என்று எங்களில் யாருக்குமே இப்போது தெரியவில்லை.
“எங்கள் குடும்பத்திலுள்ள குழப்பத்தில் உங்களையும் வரச் சொல்லி உங்கள்
எல்லோரையும் மிகவும் கஷ்டப்படுத்தி விட்டோம். மீண்டும் உங்கள் அனைவரிடமும் சுந்தரேசன்,
சீதா இருவர் சார்பிலும் எங்கள் சார்பிலும் நாங்கள் எல்லோரும் மன்னிப்பு கேட்கிறோம்.
நேற்றே உங்களிடம் உண்மையைச் சொல்லி இன்று வர வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால்
சீதா நிலமையை நினைத்து பேசாமலிருந்து விட்டோம். இப்போது எல்லோரும் உள்ளே போவோம். நீங்கள்
இருவரும் சீதாவிடம் ‘உங்க பெண் ஜானுவை எங்களுக்குப் பிடித்திருக்கிறது மற்றவை பிறகு
போனில் பேசுவோம்’ என்று தயவு செய்து சொல்லி
விடுங்கள்.” என்றாள்.
மாப்பிள்ளையுடைய பெற்றோர்களும் கண்கள் கலங்க சரியென்று தலையசைத்தார்கள்.
மறு நாள் கணேசன் தன்னுடைய மனைவி மற்றும் ஒரு வயது பெண் குழந்தையுடன்
வந்ததும் சீதாவுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. “ கணேசா, ஜானுவுடைய கல்யாணத்திற்கு எல்லோரையும்
அழைச்சுட்டு வந்திட்டியே, எங்க மேலேயிருந்த உன்னுடைய கோபமெல்லாம் ஜானுவினுடைய கல்யாணம்
வருவதால் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டது இல்லையா’? என்று சிரித்தபடியே கேட்டாள்.
கணேசன் கண்கள் கலங்கியவாறு அம்மாவைக் கட்டிக் கொண்டு ‘என்னை மன்னித்து
விடம்மா, உன்னை நான் சரியாகக் கவனிக்காமல் இருந்து விட்டேன்’என்றான். சுந்தரேசனும்
இரு கைகளாலும் மகனை அணைத்துக் கொண்டார்.
மறு நாள் மன நல மருத்துவர் ஆலோசனைப் படி நல்ல வசதியுள்ள ஒரு மன நலக்
காப்பகத்தில் சீதாவை சேர்த்தார்கள். தனி அனுமதி பெற்று சுந்தரேசனும் சீதாவுடன் அங்கு
தங்கிவிட்டார்.
தன்னுடைய கணவன் , மகன் இருவரையும் பார்த்து சீதா, “ நாம இப்ப புது இடத்துக்கு
வந்து விட்டோமே, ஜானுவுக்கு இந்த இடத்தைப் பற்றி உடனே தகவல் சொல்லிடுங்கோ. “ என்று
சீதா சொல்லிவிட்டு, உடனே இருவரிடமும் கேட்டாள்
“ஆமா நம்ம ஜானு என்னைப் பார்க்க
எப்ப வருவா? “
Comments
Post a Comment